மே, 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மே 2022

புயலை தகர்க்கும் நம்பிக்கை

2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28). 

வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம். 

உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.

முழு உலகத்திற்கும் சுகம்

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது. 

முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. 

சற்று நிறுத்தி ஜெபியுங்கள்!

வீதியிலிருந்த தீயணைப்பு குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடைத்தது. அது எனக்கு ஒரு வாய்ப்பாய் தெரிந்தது. எனக்கு முன், பல கார்கள் அதின் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்துக் கொண்டது. 'காரை சுத்தம் செய்வதற்கு என்ன அருமையான இலவச வாய்ப்பு!' என்றெண்ணினேன். மாதக்கணக்காய் என் காரை கழுவவில்லை. அதினால் அழுக்கு அடர்த்தியாய் படிந்திருந்தது. ஆகையால் நானும் என் காரை அந்த தண்ணீருக்குள் செலுத்தினேன். 

அவ்வளவுதான், 'க்ராக்!' என்று சத்தம் கேட்டது. அன்று காலைல்தான் சூரிய ஒளி என் கருப்புநிற காரின் கண்ணாடி, உட்பகுதியையும் சூடேற்றியிருந்தது. தீயணைப்புக் குழாயிலிருந்து வந்த தண்ணீரோ உறைந்திருந்தது. இந்த குளிர்ந்த நீர் சூடான கண்ணாடியின் மேல் பட்ட மாத்திரத்தில், மேலிருந்து கீழாக விரிசல் ஏற்பட்டது. என் 'இலவச கார் சலவை', அதிக செலவையே உண்டுபண்ணியது. 

அதை செய்வதற்கு முன்பாக சற்று நேரமெடுத்து யோசித்திருந்தால் அல்லது ஜெபித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அப்படிப்பட்ட தருணம் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா? இஸ்ரவேலர்கள் இதைவிட கடினமான சூழ்நிலைகளில் இதை அனுபவித்துள்ளனர். தேவன் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் குடிகளை விரட்டியடிப்பதாக அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார் (யோசுவா 3:10). எனவே, அவர்கள் அந்நிய தேவர்களால் ஈர்க்கப்பட அவசியமில்லாதிருந்தது (உபாகமம் 20:16-18). ஆனால் ஒரு புறஜாதி தேசம், இஸ்ரவேலர்களின் வெற்றிகளை பார்த்து பயத்தினால், உலர்ந்து பூசணம் பூத்த அப்பத்தை  உண்ணக் கொடுத்து, தாங்கள் தூர தேசத்தில் வசிப்பவர்களென்று இவர்களை நம்பச் செய்தார்கள் . “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்”. (யோசுவா 9:14-15). யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணினான். இது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமானது. 

நாம் ஜெபத்தை இறுதியாய் அல்லாமல் முதன்மையாய் வைத்து தீர்மானம் எடுக்கும்போது, தேவனுடைய வழிநடத்துதலையும், ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறோம். சற்று நேரம் நின்று யோசிப்பதற்கு தேவன் இன்று நமக்கு நினைப்பூட்டுவாராக.

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.